சென்னை: ஆன் லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆன்-லைன் வர்த்தகத்தில் மருந்து பொருட்கள் விற்பனை செய்வது கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறைவான ஒழுங்கமைப்புகளுடன், இணையதள மருந்துச் சீட்டு அடிப்படையில் ஆன்-லைன் வர்த்தகத்தில் மருந்துகள் விற்கப்படுகின்றன. முறையான மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுப்பது ஆபத்தானது என்றாலும் விற்பனை தொடர்கிறது. ஆன்-லைன் வர்த்தகத்தில் பல்வேறு மருந்து வணிகர்கள் சார்பில் இருமல் மருந்து, தூக்க மாத்திரை, வயாகரா உள்ளிட்ட பல்வேறு வகை மருந்துகள் மருந்துச் சீட்டு, அங்கீகாரம் இல்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று தடை செய்யப்பட்ட மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கச் செயலாளர் என்.ஆனந்தன் கூறுகையில், ‘இதுதொடர்பாக புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பொதுமக்கள் மற்றும் எங்களது நலன் கருதி இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை(14ம் தேதி) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதையடுத்து, நாளை நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்துகடைகள் மூடப்படும். தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் மருந்து கடைகளும் மூடப்படும்’ என்றார். வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைன் வர்த்தகத்தில் மருந்துகளை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மருந்து பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுத்த நாடு முழுவதும் உள்ள மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் நாளை நடத்த உத்தேசித்துள்ள நாடு தமுவிய ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மிகவும் நியாயமானது. போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கிறது. மத்திய அரசு, அகில இந்திய மருந்து வணிகர்களின் கோரிக்கையினை உடனடியாக பரீசீலனை செய்து ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்துகளை ஈடுபடுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 1,200க்கும் அதிகமான கடைகள் உள்ளது. அனைவரும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் 24 மணி நேரமும் ஈடுபடுகிறோம். நாளை காலை கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என தஞ்சை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் விஸ்வம் தொிவித்தார்.திருச்சி மாவட்டத்தில் 1000 மருந்துக்கடைகள் அடைக்கப்படுகிறது. காலை 10 மணி அளவில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது’ என்று திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மனோகரன் தொிவித்துள்ளார். மருந்து வணிகர்கள் போராட்டத்தால் நாளை மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் நோயாளிகள் முன்னதாகவே அவசர சமயத்திற்கு தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளும்படி மருந்து வணிகர்கள் தொிவித்துள்ளனர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=172698













0 thoughts on “ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் நாளை ஸ்டிரைக்”