2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ரியோடிஜெனீரோவில் (பிரேசில்) ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், டென்னிஸ் உள்பட 28 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியை நடத்தும் நாடு தங்கள் கண்டத்தில் பிரபலமாக உள்ள ஒரு சில விளையாட்டுகளை புதிதாக சேர்த்து கொள்ளலாம். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்து தான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும்.
டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால் அல்லது சாப்ட்பால், கராத்தே, போர்டு ஸ்கேட்டிங், மலையேற்றம், அலைச்சறுக்கு ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்க்கும் படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்து இருக்கிறது.
அடுத்த ஆண்டு (2016) ஆகஸ்டு மாதம் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கமிட்டி கூட்டத்தில் தான் புதிய போட்டிகளாக எவை? சேர்க்கப்படும் என்பது ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படும்.
பவுலிங், ஊசூ, ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளும் முதல் கட்ட சிபாரிசு பட்டியலில் இடம் பெற்று இருந்தன. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி நேற்று சிபாரிசு செய்த இறுதிப்பட்டியலில் இந்த 3 விளையாட்டுகளின் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டியில் இடம் பிடிப்பது அரிதாகி இருக்கிறது. பாரம்பரியம் மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய போட்டிகளை சிபாரிசு செய்து இருப்பதாக போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. ‘ஸ்குவாஷ் போட்டி சிபாரிசு செய்யப்படாதது வேதனை அளிக்கிறது’ என்று உலக ஸ்குவாஷ் பெடரேஷன் தலைவர் என்.ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.


http://www.aatroram.com/?p=33467