போலீஸாரால் தேடப்பட்டு வந்த பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பவித்ரா, சென்னையில் பிடிபட்டார். இந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமில் அஹமது இறந்ததே ஆம்பூர் வன்முறைகளுக்குக் காரணமானது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகொண்டா அருகிலுள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா (28), அண்மையில் காணாமல் போனார். இதுதொடர்பாக ஆம்பூர், பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஷமில் அஹமதுவை (26) போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஷமில் அஹமது சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஜூன் 26-ஆம் தேதி இறந்தார். இதைத் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் காவல் நிலையம் முற்றுகை, தேசிய நெடுஞ்சாலையில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் வன்முறையாக மாறியதில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். அரசு, மக்களின் சொத்துகளும் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ஷமில் அஹமது இறந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். பவித்ராவை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், பவித்ராவின் கணவர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். சிம் கார்டால் பிடிபட்டார்: போலீஸ் விசாரணையில், பவித்ராவின் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டதும், அது சென்னை அம்பத்தூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த பவித்ரா, அவரோடு இருந்த சுரேந்தர், சரவணன் ஆகிய மூவரும் பிடிபட்டனர். அவர்களிடம் அரக்கோணம், மேல்பாடி காவல் நிலையங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அழைத்து வரப்பட்ட பவித்ராவிடம் காவல் கண்காணிப்பாளர் பி.கே.செந்தில்குமாரி, ஏடிஎஸ்பி அசோக்குமார், ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் வேலூர் நீதித்துறை நடுவர் மும்மூர்த்தியின் இல்லத்தில் பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், அப்போது அவரது கணவர் பழனியையும், பெற்றோரையும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் அரியூர் பெண்கள் காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை காலை பவித்ரா சென்னைக்கு ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட உள்ளார். சென்னைக்குச் சென்றது எப்படி? பவித்ராவுடன் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த ஷமில் அஹமதுடன் அவருக்கு முறைகேடான நட்பு இருந்தது தெரியவந்ததாக ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பவித்ரா, ஷமில் அஹமது ஆகிய இருவரும் ஒரே காலணித் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் இருந்ததையடுத்து, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஷமில் அஹமது ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வந்தார். ஷமில் அஹமதுவைத் தேடி பவித்ரா ஈரோடு சென்றபோது, அங்கு அவர் தங்க ஷமில் அஹமது வசதிகளைச் செய்துகொடுத்துள்ளார். இதனிடையே பவித்ரா காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனி புகார் செய்ததை அறிந்த ஷமில் அஹமது, பவித்ராவை ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார். எனினும், பவித்ரா வீட்டுக்குச் செல்லாமல் சென்னைக்கு சென்றுள்ளார் என்றார்.ரயில் சிநேகத்தால் உதவிய இளைஞர்கள் அரக்கோணம், ஜூலை 5: ரயில் சிநேகத்தால் பவித்ராவுக்கு இரு இளைஞர்கள் உதவி புரிந்தது தெரிய வந்ததாக போலீஸார் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பவித்ராவுடன் அரக்கோணத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சரவணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுரேந்திரன் ஆகிய இருவரும் இருந்தனர். ஜோலார்பேட்டை- சென்னை ரயிலில் சென்னை செல்லும்போது இவர்களுக்கு பவித்ராவின் நட்பு கிடைத்துள்ளது. ஈரோட்டில் இருந்து வந்த பவித்ரா, சுரேந்திரனைத் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் சந்தித்த நிலையில் சுரேந்திரன் துணைக்கு சரவணனையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அம்பத்தூரில் இருந்த மகளிர் விடுதியில் பவித்ரா தங்கி, துணிக் கடையில் பணிபுரிந்தது தெரியவந்தது. பவித்ராவின் செல்லிடப்பேசி எண்ணை போலீஸார் ஆய்வு செய்தபோது அவருடன் அடிக்கடி சுரேந்திரன் பேசியதும், சுரேந்திரனின் செல்லிடப்பேசி எண்ணில் சரவணன் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூவரும் இருந்தபோது போலீஸார் பிடித்தனர். Link: http://www.dinamani.com/tamilnadu/2015/07/06/ஆம்பூர்-வன்முறை-விவகாரம்-கா/article2904221.ece via http://j.mp/tamil_news
Home
ஆம்பூர் வன்முறை விவகாரம்: காணாமல் போன பவித்ரா சென்னையில் பிடிபட்டார்
ஆம்பூர் வன்முறை விவகாரம்: காணாமல் போன பவித்ரா சென்னையில் பிடிபட்டார்
By Unknown 1:44 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆம்பூர் வன்முறை விவகாரம்: காணாமல் போன பவித்ரா சென்னையில் பிடிபட்டார்”