சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3–ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய போயஸ் கார்டனில் இருந்து மதியம் 1.30 மணிக்கு தண்டையார்பேட்டைக்கு புறப்பட்டார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, மெரினா கடற்கரை சாலை, கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் சாலை வழியாக தண்டையார் பேட்டை சென்ற அவருக்கு வழி நெடுக மக்கள் வரவேற்பு அளித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஜெயலலிதாவை மேளதாளம் முழங்க வரவேற்றனர்.
மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு சென்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2 மணி அளவில் தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ் பாபு எம்.பி., சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.
ஜெயலலிதாவை பார்த்ததும் கூடி இருந்த மக்கள் ‘புரட்சித் தலைவி வாழ்க’ ‘அம்மா வாழ்க’ என்று முழக்கமிட்டனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா புன்சிரிப்புடன் வணக்கம் தெரிவித்தார். பின்னர் காரில் புறப்பட்டு அதே பாதையில் போயஸ்கார்டன் சென்றார்.
ஜெயலலிதா வருகையையொட்டி தண்டையார் பேட்டையில் 1000–த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 50 தேர்தல் பொறுப்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளிலும் அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் முகாமிட்டு வீதிவீதியாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களை கட்டி உள்ளது.













0 thoughts on “ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா”