சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை ஐ.ஐ.டி. நிர்வாகம் நீக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிவந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சைக்குரிய கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனருக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஐ.ஐ.டி. விசாரணை நடத்தி அம்பேத்கர், பெரியார் மாணவர் வட்டம் அமைப்பிற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஐ.ஐ.டி.யிடம் விளக்கம் கேட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட முந்தைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஐ.ஐ.டி நிர்வாகத்துடன் மாணவர் அமைப்பினர் இன்று பேசுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டது. மேலும், அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டமானது சுயேட்சையான மாணவர் அமைப்பாக இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆலோசகராக பேராசிரியர் மிலிந்த் பிராமியை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இதன்மூலம் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.













0 thoughts on “சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நீக்கம்”