குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ள 1:2 என்ற விகிதத்தில் 2,800 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான தேர்வு முடிவு கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் எதுவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று காலை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைவரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, மனு கொடுக்க நேற்று மதியம் ஒரு மணியளவில் தலைவர் அறைக்கு சென்றனர். அப்போது, மனு கொடுக்க சென்றவர்களில் சிலரை தனியாக அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விபரம் கேட்டுள்ளனர். இதில் சில அதிகாரிகள் மனு கொடுக்க சென்றவர்களில் சிலரது பதிவு எண் மற்றும் பெயர் விபரங்களை கேட்டு குறித்து வைத்துள்ளனர். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மனு கொடுக்க சென்றவர்கள் கருதுகின்றனர்.
மேலும், மனு அளிக்க காத்திருந்தவர்கள் அதிகாரிகள் உத்தரவுப்படி அலுவலக வளாகத்தை விட்டு காவலாளிகளால் வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘எவ்வித காரணமின்றி எங்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு கொடுக்க சென்றால் அதிகாரிகளில் சிலர் எங்களது பதிவு எண் மற்றும் பெயர் விபரங்களை குறித்து கொண்டு மிரட்டுகின்றனர். நியாயம் கிடைக்கும் என்று வந்த இடத்தில் அதிகாரிகள் அநியாயமாக நடக்கின்றனர். எனவே எங்களுடைய மதிப்பெண் பட்டியலை உடனடியாக வெளியிட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்க முடியாத ஆவணங்களை சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி கொடுத்த கால அவகாசத்துக்குள் சமர்ப்பித்தும் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது’ என்றனர்.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘குரூப் 2 தேர்வில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.














0 thoughts on “குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு ”