சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகைத் தொகையைதான் முன்பணமாக வாங்க வேண்டும் என்று சென்னை சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வாடகை தரவில்லை
சென்னை 13-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில், நியமித்துல்லா என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘ஹரிகரராஜன் என்பவர் தன் வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும், கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் முதல் 2008-ம் ஆண்டு ஜனவரி வரை வேண்டுமென்றே வாடகை கட்டணத்தை தராமல் இருந்து வருகிறார். எனவே, ஹரிகரராஜனை என் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு, ஹரிகரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மனுதாரர் கூறுவது தவறு என்றும், வீட்டு வாடகை பணத்தை ‘மணியார்டர்’ மூலம் அனுப்பியதை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
2 மாத வாடகை
இந்த வழக்கை நீதிபதி சி.சசிகுமார் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் வீட்டில் எதிர்மனுதாரர் ஹரிகரராஜன் வாடகைக்கு இருந்து வருகிறார். இதற்காக மாதம் ரூ.2,500 வாடகை கட்டணமும், 10 மாத வாடகைக் கட்டணமான ரூ.25 ஆயிரத்தை முன்தொகையாகவும் வீட்டின் உரிமையாளருக்கு, அவர் கொடுத்து வந்துள்ளார். தற்போது, 11 மாத வாடகை தரவில்லை என்று வீட்டின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், 9 மாத வாடகை கொடுத்துள்ளதற்கான ஆதாரங்களை ஹரிகரராஜன் தாக்கல் செய்துள்ளார். 2 மாதம் வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்பதால், வீட்டின் உரிமையாளருக்கு அவர் 2 மாத வாடகை கொடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அதே நேரம், 1996-ம் ஆண்டு கே.நரசிம்மராவ் - டி.எஸ்.நசிமூதீன் அகமது ஆகியோரது வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வீட்டை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து ஒரு மாத வாடகை கட்டணத்தைத்தான் முன்பணமாக பெறவேண்டும். ஒருவேளை அதிக தொகை வசூலித்து இருந்தால், அந்த கூடுதல் தொகையை திருப்பிக் கொடுக்கவேண்டும். அல்லது வாடகை கட்டணத்தில் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மனுதாரர் நியமியத்துல்லா, ரூ.25 ஆயிரம், அதாவது 10 மாத வாடகைத் தொகையை முன்பணமாக வாங்கியுள்ளார்.
முன்பணம் உள்ளது
எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ரூ.2,500-யை முன்பணமாக வைத்துக் கொண்டாலும், மனுதாரரிடம் கூடுதலாக ரூ.22,500 உள்ளது. அதில், 2 மாத வாடகை கட்டணத்தை, (ரூ.5 ஆயிரத்தை) கழித்தாலும் ரூ.17,500 வீட்டின் உரிமையாளரிடம் உள்ளது. எனவே, வீட்டின் உரிமையாளரிடம் இவ்வளவு பெரிய தொகை இருக்கும்போது, ஹரிகரராஜன் வேண்டு மென்றே வாடகை தொகையை கொடுக்காமல் உள்ளார் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அவரை வீட்டை விட்டு வெளியேற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Link: www.DailyThanthi.com/News/State/2015/08/08010632/The-owners-of-the-house-to-get-a-months-rent-in-advance.vpf
via http://j.mp/tamil_news













0 thoughts on “வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை குறிப்பிட்டு, சிவில் கோர்ட்டு உத்தரவு”