போபால்: மத்திய பிரதேசத்தில் மசாக் ஆற்றுப் பாலத்தை கடக்கும் போது, அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 20 பேர் பலியாயினர். மீட்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.மத்தியபிரதேச மாநிலத்தில் காமயானி எக்ஸ்பிரஸ் ரயில், மசாக் ஆற்றின் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பெட்டிகள் ஆற்றில் விழுந்தன. காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஜபல்பூர்- ஜனதா பயணிகள் ரயிலும் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 4 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விழுந்தன. அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.மீட்பு பணியில் ராணுவத்தினர் : அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக சிறப்பு மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் போபாலில் இருந்து ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.மூன்று மீட்பு ரயில்கள் : விபத்துக்குள்ளான ரயில்களிலிருந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாகவும், சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதாகவும், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் மூன்று மீட்பு ரயில்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.அமைச்சர் விரைவு : ரயில்கள் விபத்திற்குள்ளான ஹர்டா பகுதிக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைந்துள்ளார். மேலும் விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 300 பேர் வரை மீட்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் கிராமத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துபகுதி வழியாக செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.20 பேர் பலி : 2 ரயில்கள் தடம் புரண்ட விபத்தில், 20 பேர் பலியானதாகவும், சுமார் 25 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் ம.பி., அரசு தெரிவித்துள்ளது. இவ்விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1311357 via http://j.mp/tamil_news













0 thoughts on “ரயில் தடம் புரண்ட விபத்தில் 20 பேர் பலி! மீட்புப் பணிகள் துரிதம் ”